1251-1260

                                                                   நிறையழிதல்

குறள் எண்: 1251

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

உரை :

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

குறள் எண்: 1252

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை 

யாமத்தும் ஆளும் தொழில்.

உரை :

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

குறள் எண்: 1253

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் 

தும்மல்போல் தோன்றி விடும்.

உரை :

யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

குறள் எண்: 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் 

மறையிறந்து மன்று படும்.

உரை :

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

குறள் எண்: 1255

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் 

உற்றார் அறிவதொன்று அன்று.

உரை :

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ 

எற்றென்னை உற்ற துயர்.

உரை :

வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!

குறள் எண்: 1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் 

பேணியார் பெட்ப செயின்.

உரை :

நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

குறள் எண்: 1258

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் 

பெண்மை உடைக்கும் படை.

உரை :

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?

குறள் எண்: 1259

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 

கலத்தல் உறுவது கண்டு.

உரை :

ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

குறள் எண்: 1260

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

உரை :

கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290