1211-1220

                                                        கனவுநிலையுரைத்தல்

குறள் எண்: 1213

நனவினால் நல்கா தவரைக் கனவினால் 

காண்டலின் உண்டென் உயிர்.

உரை :

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

குறள் எண்: 1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் 

நல்காரை நாடித் தரற்கு.

உரை :

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

குறள் எண்: 1215

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் 

கண்ட பொழுதே இனிது.

உரை :

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

குறள் எண்: 1216

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் 

காதலர் நீங்கலர் மன்.

உரை :

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

குறள் எண்: 1217

நனவினால் நல்காக் கொடியார் கனவினால் 

என்எம்மைப் பீழிப் பது.

உரை :

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

குறள் எண்: 1218

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் 

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

உரை :

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.

குறள் எண்: 1219

நனவினால் நல்காரை நோவர் கனவினால் 

காதலர்க் காணா தவர்.

உரை :

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்து கொள்வர்.

குறள் எண்: 1220

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் 

காணார்கொல் இவ்வூ ரவர்.

உரை :

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290