1231-1240

                                                           உறுப்புநலனழிதல்

குறள் எண்: 1231

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி 

நறுமலர் நாணின கண்.

உரை :

இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

குறள் எண்: 1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் 

பசந்து பனிவாரும் கண்.

உரை :

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

குறள் எண்: 1233

தணந்தமை சால அறிவிப்ப போலும் 

மணந்தநாள் வீங்கிய தோள்.

உரை :

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

குறள் எண்: 1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் 

தொல்கவின் வாடிய தோள்.

உரை :

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

குறள் எண்: 1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு 

தொல்கவின் வாடிய தோள்.

உரை :

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

குறள் எண்: 1236

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் 

கொடியர் எனக்கூறல் நொந்து.

உரை :

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

குறள் எண்: 1237

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் 

வாடுதோட் பூசல் உரைத்து.

 உரை :

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

குறள் எண்: 1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 

பைந்தொடிப் பேதை நுதல்.

உரை :

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

குறள் எண்: 1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற 

பேதை பெருமழைக் கண்.

உரை :

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

குறள் எண்: 1240

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே 

ஒண்ணுதல் செய்தது கண்டு.

உரை :

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

Comments

Popular posts from this blog

1171-1180

1281-1290