1051-1060

                                                                        இரவு

குறள் எண்: 1051

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் 

அவர்பழி தம்பழி அன்று.

உரை :

இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

குறள் எண்: 1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை 

துன்பம் உறாஅ வரின்.

உரை :

இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

குறள் எண்: 1053

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று 

இரப்புமோ ரேஎர் உடைத்து.

உரை:

ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

குறள் எண்: 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் 

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

உரை :

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

குறள் எண்: 1055

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று 

இரப்பவர் மேற்கொள் வது.

உரை :

ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

குறள் எண்: 1056

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை 

எல்லாம் ஒருங்கு கெடும்.

உரை :

உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

குறள் எண்: 1057

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் 

உள்ளுள் உவப்பது உடைத்து.

உரை :

இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

குறள் எண: 1058

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் 

மரப்பாவை சென்றுவந் தற்று.

உரை :

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

குறள் எண்: 1059

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் 

மேவார் இலாஅக் கடை.

உரை :

பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

குறள் எண்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை 

தானேயும் சாலும் கரி.

உரை :

இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290