1131-1140

                                                              நாணுத்துறவுரைத்தல்

குறள் எண்: 1131

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் 

மடலல்லது இல்லை வலி.

உரை :

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

குறள் எண்: 1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் 

நாணினை நீக்கி நிறுத்து.

உரை :

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

குறள் எண்: 1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் 

காமுற்றார் ஏறும் மடல்.

உரை :

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

குறள் எண்: 1134

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு 

நல்லாண்மை என்னும் புணை.

உரை :

நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

குறள் எண்: 1135

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு 

மாலை உழக்கும் துயர்.

உரை :

மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

குறள் எண்: 1136

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற 

படல்ஒல்லா பேதைக்கென் கண்.

உரை :

மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

குறள் எண்: 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் 

பெண்ணின் பெருந்தக்க தில்.

உரை :

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

குறள் எண்: 1138

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் 

மறையிறந்து மன்று படும்.

உரை :

இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!

குறள் எண்: 1139

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் 

மறுகின் மறுகும் மருண்டு.

உரை :

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

குறள் எண்: 1140

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் 

யாம்பட்ட தாம்படா ஆறு.

உரை :

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290