1181-1190

                                                         பசப்புறுபருவரல்

குறள் எண்: 1181

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.

உரை :

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

குறள் எண்: 1182

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் 

மேனிமேல் ஊரும் பசப்பு.

உரை :

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

குறள் எண்: 1183

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா 

நோயும் பசலையும் தந்து.

உரை :

காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

குறள் எண்: 1184

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் 

கள்ளம் பிறவோ பசப்பு.

உரை :

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

குறள் எண்: 1185

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் 

மேனி பசப்பூர் வது.

 உரை :

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

குறள் எண்: 1186

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் 

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

உரை :

விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

குறள் எண்: 1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் 

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

உரை :

தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

குறள் எண்: 1188

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் 

துறந்தார் அவர்என்பார் இல்.

உரை :

இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!

குறள் எண்: 1189

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் 

நன்னிலையர் ஆவர் எனின்.

உரை :

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

குறள் எண்: 1190

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் 

நல்காமை தூற்றார் எனின்.

உரை :

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.




Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290