1261-1270

                                                        அவர்வயின்விதும்பல்

குறள் எண்: 1261

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற 

நாளொற்றித் தேய்ந்த விரல்.

உரை :

என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

குறள் எண்: 1262

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 

கலங்கழியும் காரிகை நீத்து.

உரை :

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

குறள் எண்: 1263

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 

வரல்நசைஇ இன்னும் உளேன்.

உரை :

வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

குறள் எண்: 1264

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் 

கோடுகொ டேறுமென் நெஞ்சு.

உரை :

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

குறள் எண்: 1265

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் 

நீங்கும்என் மென்தோள் பசப்பு.

மு.வரதராசனார் உரை :

என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

குறள் எண்: 1266

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் 

பைதல்நோய் எல்லாம் கெட.

உரை :

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

குறள் எண்: 1267

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் 

கண்அன்ன கேளிர் விரன்.

உரை :

என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

குறள் எண்: 1268

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து 

மாலை அயர்கம் விருந்து.

உரை :

அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

குறள் எண்: 1269

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் 

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

உரை :

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாக) கழியும்.

குறள் எண்: 1270

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 

உள்ளம் உடைந்துக்கக் கால்.

உரை :

துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290