1271-1280

                                                       குறிப்பறிவுறுத்தல்

குறள் எண்: 1271

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

உரை :

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

குறள் எண்: 1272

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் 

பெண்நிறைந்த நீர்மை பெரிது.

உரை :

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

குறள் எண்: 1273

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை 

அணியில் திகழ்வதொன்று உண்டு.

உரை :

(கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

குறள் எண்: 1274

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை 

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

உரை :

அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

குறள் எண்: 1275

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் 

தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

உரை :

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

குறள் எண்: 1276

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி 

அன்பின்மை சூழ்வ துடைத்து.

உரை :

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

குறள் எண்: 1277

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 

முன்னம் உணர்ந்த வளை.

உரை :

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

குறள் எண்: 1278

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் 

எழுநாளேம் மேனி பசந்து.

 உரை :

எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

குறள் எண்: 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி 

அஃதாண் டவள்செய் தது.

உரை :

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

குறள் எண்: 1280

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

உரை :

கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.



Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290