1301-1310

                                                                                     புலவி

குறள் எண்: 1301

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் 

அல்லல்நோய் காண்கம் சிறிது.

உரை :

(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

குறள் எண்: 1302

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 

மிக்கற்றால் நீள விடல்.

உரை :

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

குறள் எண்: 1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 

புலந்தாரைப் புல்லா விடல்.

உரை :

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

குறள் எண்: 1304

ஊடி யவரை உணராமை வாடிய 

வள்ளி முதலரிந் தற்று.

உரை :

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

குறள் எண்: 1305

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை 

பூஅன்ன கண்ணார் அகத்து.

உரை :

நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

குறள் எண்: 1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம் 

கனியும் கருக்காயும் அற்று.

உரை :

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

குறள் எண்: 1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 

நீடுவ தன்றுகொல் என்று.

உரை :

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

குறள் எண்: 1308

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் 

காதலர் இல்லா வழி.

உரை :

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

குறள் எண்: 1309

நீரும் நிழலது இனிதே புலவியும் 

வீழுநர் கண்ணே இனிது.

உரை :

நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

குறள் எண்: 1310

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் 

கூடுவேம் என்பது அவா.

உரை :

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290